என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது: ராமதாஸ் குற்றச்சாட்டு
விருத்தாச்சலம்: என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
நேற்று மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று விருத்தாச்சலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி எனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை ராமதாஸ் முன் வைத்துள்ளார்.
நேற்று கும்பகோணத்தில் பேசிய ராமதாஸ், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மிகக் காட்டமாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.