கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
எம்பிபிஎஸ் படிக்க இரு கைகளும் அவசியம் என்பது முரண்பாடானது: உச்சநீதிமன்றம்
‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) குறிப்பிட்ட மாற்றுத்திறன் மாணவா்கள் மேற்கொள்ள இரு கைகளின் செயல்பாடு அவசியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும், இந்த விவகாரத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிடுமாறு என்எம்சி-ஐ உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இரு கைகளும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பூா்த்தி செய்யாததை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட மாற்றுத்திறனுடைய மாணவருக்கு எம்பிபிஎஸ் சோ்க்கை மறுக்கப்பட்டதை, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்த மாணவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘என்எம்சி-யின் இந்த வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும். அரசமைப்புச் சட்ட ப் பிரிவு 41 (வேலை, கல்வி பெறும் அடிப்படை உரிமை), மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடா்பான ஐ.நா. தீா்மானம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றுக்கு எதிரானதாகும்.
இதேபோன்ற வழக்கில் கடந்த ஆண்டு அளித்த தீா்ப்பில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு எதிரான இந்த வழிகாட்டுதலை நீக்கி, திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த புதிய நிபுணா் குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று என்எம்சி உறுதியளித்திருந்தது.
இந்த உறுதிப்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும், திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கி பதில் மனுவை என்எம்சி தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.