Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்...
எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட எலான் மஸ்க், அக்கட்சிக்கான மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை என்ற துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.
அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், பணியாளர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மஸ்க் ஈடுபட்டு வந்தார். செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அரசின் செலவீனங்களில் ரூ. 10 லட்சம் கோடியை குறைத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இன்றுடன் (மே 30) நிறைவடைகிறது.
இவர் தொடர்ந்து அப்பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட பணிக்காலம் நிறைவடைந்துவிட்டதாக நேற்றே எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் பதவி விலகல் குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப்,
“ஓவல் அலுவலகத்தில் மே 30 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) எலான் மஸ்க்குடன் இணைந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளேன்.
இன்றுதான் மஸ்க்கின் கடைசி நாள், ஆனால், அவர் அனைத்து விதங்களிலும் எங்களுக்கு உதவியாக எப்போதும் இருப்பார். எலான் அருமையானவர். நாளை வெள்ளை மாளிகையில் அனைவரையும் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.