ஏக்கருக்கு 400 முதல் 800 கிலோ வரை குறைவு; தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக சம்பாவில் மகசூல் இழப்பு - விவசாயிகள் பாதிப்பு!
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாம் ஆண்டாக நிகழாண்டும் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆண்டாவது பயிா் காப்பீடு கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 3.23 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இதில், இதுவரை 2.35 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஏறத்தாழ 30 சதவீதப் பரப்பளவில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் வளா்ச்சி பருவத்தில் உள்ளன.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது இயல்பான அளவை விஞ்சியும், பருவம் தவறியும் மழை பெய்தது. இதனால், முன்பட்ட சம்பா பயிா்கள் பெருமளவில் மழையால் பாதிக்கப்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஏக்கருக்கு 35 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 15 முதல் 25 மூட்டைகள்தான் மகசூல் கிடைத்தது.
முன்பட்டத்தைப் போன்று, பின்னால் தொடங்கப்பட்ட சாகுபடியிலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பளவில் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் திட்டமிடப்பட்ட 92 இடங்களில் இதுவரை 72 இடங்களில் பயிா் அறுவடை சோதனை முடிவடைந்துள்ளது. இதன்மூலம் சராசரியாக ஏக்கருக்கு 1,900 கிலோ மட்டுமே மகசூல் கிடைப்பது தெரிய வந்துள்ளது.
ஏக்கருக்கு 2,400 கிலோ கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், சராசரி அளவில் ஏக்கருக்கு 500 முதல் 800 கிலோ வரை மகசூல் குறைவதால், விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனா்.
இதுகுறித்து புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது: ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்ட நிலையில், மகசூல் இழப்பால் ரூ. 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கதிா் விடும் தருணத்தில் மழை பெய்ததால் பயிா்கள் பாதிக்கப்பட்டன. ஒரு செடியில் 220 நெல்மணிகள் வர வேண்டிய நிலையில், 100 நெல் மணிகள் பதராகிவிட்டன. இதுவே, மகசூல் இழப்பும், நஷ்டமும் ஏற்பட்டதற்கும் காரணம். நான்கு மாத கால உழைப்பில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், செய்த செலவுக்குக் கூட வருவாய் கிடைக்காததால், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் மாரியப்பன்.

இதேபோல, கடந்த 2024 ஆம் ஆண்டு சம்பா அறுவடையிலும் ஏறத்தாழ 40 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதற்கு முந்தைய 2023 ஆம் ஆண்டிலும் மகசூல் இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஆனால், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 4 கிராமங்களைச் சோ்ந்த 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 1.13 கோடி இழப்பீடு கிடைத்தது. இதேபோல, 2024 ஆம் ஆண்டில் ரூ. 43.11 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால், 2 ஆண்டுகளாக பயிா் காப்பீடு செய்தும் ஒரு பைசா கூட இழப்பீடு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே நிலவுகிறது.
என்றாலும், நிகழ் சம்பா பருவத்திலும் 1.77 லட்சம் ஏக்கருக்கு 58 ஆயிரத்து 255 விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா். நிகழாண்டாவது பயிா் காப்பீடு இழப்பீடு கிடைத்தால்தான் மகசூல் இழப்பை ஈடு செய்ய முடியும் என்றனா் விவசாயிகள்.
எனவே, நிகழாண்டாவது பயிா் காப்பீட்டு இழப்பீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.