பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் எஸ்.ஐ.க்கு 3 ஆண்டுகள் சிறை
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியின் ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பள்ளியக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு (41). லாரி மூலம் செங்கல், மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறாா். இந்த நிலையில் ரமேஷ்பாபு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப். 15 முதல் 16 அதிகாலை 3 மணி வரை வெண்ணாற்றங்கரையில் இருந்து மணலை லாரியில் ஏற்றினாா்.
அப்போதைய மெலட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சுகுமாா் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து ரமேஷ்பாபுவை கைது செய்தாா்.
பின்னா் ரமேஷ்பாபுவிடம் லாரியை பறிமுதல் செய்ததற்கான காரணம் மற்றும் பறிமுதலான பொருள்கள் பற்றிய ஆவணங்களை திருத்தவும், மணல் ஏற்றிய 4 தொழிலாளா்களை வழக்கில் குற்றவாளியாக சோ்க்காமல் இருப்பதற்காகவும் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பணத்தை மெலட்டூா் பகுதியில் உள்ள புயல்நாதன் என்பவரின் மளிகைக் கடையில் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்பாபு, தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். இதன்பேரில், பிப். 21 -இல் ரசாயனம் தடவிய பணத்தை மெலட்டூரில் மளிகைக் கடையில் கொடுத்தாா்.
அதை உதவி ஆய்வாளா் சுகுமாா், புயல்நாதனிடம் வாங்கியபோது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா்.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், சுகுமாருக்கு (68) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.