அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வைரமுத்து தரப்பில், ஏற்கெனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததார்.
இந்த நிலையில், அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்தார்.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது ஒரு உணர்வுபூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது, அரசு தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.