ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.
கடந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி உள்பட மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜோமெல் வாரிக்கன் மற்றும் பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
ஜோமெல் வாரிக்கன் (மேற்கிந்தியத் தீவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு தனது அபார பந்துவீச்சின் மூலம் உதவினார் ஜோமெல் வாரிக்கன். இதன் மூலம், டெஸ்ட் தொடர் சமனில் நிறைவடைந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோமெல் வாரிக்கன் 10 விக்கெட்டுகள் மற்றும் 31* ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது போட்டியில் அவர் 54 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: ஓய்வை அறிவித்தது ஏன்? மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளக்கம்!
நோமன் அலி (பாகிஸ்தான்)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக நோமன் அலி இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், இரண்டாவது போட்டியில் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
இரண்டாவது போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நோமன் அலி, பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். இந்தத் தொடரில் 12.62 சராசரியுடன் நோமன் அலி, 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வருண் சக்கரவர்த்தி (இந்தியா)
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்ததிலிருந்து வருண் சக்கரவர்த்தி மிகவும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தார்.
இதையும் படிக்க: விராட் கோலி நீக்கமா? ரோஹித் சர்மா விளக்கம்!
வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
இந்த டி20 தொடரில் 9.41 சரசாரியுடன் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
மேற்கண்ட மூவரில் ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.