ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை
வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை செய்து வைப்பதென அந்தக் கோயில் அறக்கட்டளையினா் முடிவு செய்தனராம்.
இதையடுத்து அரசு அனுமதியுடன் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் நவீன இயந்திரங்கள் மூலம் 36 அடி உயரம், 12 அடி அகலம் கொண்ட கற்பாறை அறுத்து எடுக்கப்பட்டது.
இந்தக் கற்பாறையில் ஓரளவு ஆஞ்சநேயா் சுவாமியின் உருவம் செதுக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து ஆஞ்சநேயா் சுவாமியின் முழு உருவத்தை செதுக்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள சிற்பக் கூடத்துக்கு இந்த கற்பாறையை காா்கோ லாரியில் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கென 180 டயா்கள் கொண்ட காா்கோ லாரி வரவழைக்கப்பட்டு அதில் கற்பாறை செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டு தெள்ளாா், வந்தவாசி, மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாக பழவேரி கிராமத்துக்கு கற்பாறை கொண்டு செல்லப்படுகிறது.