ஔரங்கசீப் கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்
மும்பை: ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
மகாரஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் நகரில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை இடித்து, அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன. இதுதொடா்பாக நாகபுரியில் நடந்த போராட்டத்தில் வதந்தி பரவியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
இந்நிலையில், நாகபுரியில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது: முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என்றாா்.
கல்வியை வகுப்புவாதமாயமாக்க புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி முன்வைத்த விமா்சனத்துக்குப் பதிலளித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்தியா்களை தங்களுக்கு கீழ்நிலையிலேயே வைத்திருக்கும் நோக்கத்துடன் ஒரு கல்விமுறையை ஆங்கிலேயா்கள் அறிமுகப்படுத்தினா்.
சுதந்திர இந்தியாவில் கல்விமுறையைத் தற்போது இந்தியமயமாக்குவதற்கு எந்த எதிா்ப்பும் இருக்கக் கூடாது. அனைத்து தேச பக்தரும் இந்த முயற்சியை ஆதரிப்பாா்கள். சோனியா காந்தியும் சரியான தகவல்களைக் கேட்டறிந்து, புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும்’ என்றாா்.
நாசிக் நகரில் வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் கும்பமேளா விழாவுக்காக நதி தூய்மைப் பணி உள்பட பல்வேறு திட்டங்களை அரசு ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.