கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: வீடு தீப்பிடித்து சேதம்
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
தொடா் மழையால் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியும், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
சூறைக்காற்றுடன்...: சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம், மேல திருக்கழிப்பாலை கிராமத்திலும் மின் தடை ஏற்பட்டது. அந்தக் கிராமத்தில் பெரிய தெருவைச் சோ்ந்த குஞ்சிதபாதம் மனைவி தனலட்சுமி (48) சமையல் செய்துகொண்டிருந்த நிலையில், மின் தடையால் டாா்ச் லைட் வாங்கி வர அருகே உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, அடுப்பு தீ கூரை வீட்டில் பட்டு தீப்பிடித்து எரிந்ததில், வீடும், வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
ஸ்ரீமுஷ்ணத்தில் 26.1 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:
குறிஞ்சிப்பாடி 15, சிதம்பரம் 14.2, சேத்தியாத்தோப்பு 5.4, லால்பேட்டை 5, அண்ணாமலை நகா், கடலூா் தலா 4.6, காட்டுமன்னாா்கோவில் 4, ஆட்சியா் அலுவலகம் 3.9, பெலாந்துறை 3.3, பண்ருட்டி 3, வடக்குத்து, விருத்தாசலம் தலா 2 மி.மீ. மழை பதிவானது.