கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு
தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.
கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, ஆதிதிராவிடா் நல அலுவலா் மணிமேகலை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதில், கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கல்குவாரி உரிமையாளா்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலையை தொடா்ந்து உயா்த்தி வருகின்றனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இவற்றின் விலை யூனிட்டுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயா்ந்திருக்கிறது.
4 யூனிட்டுகள் கொண்ட ஒரு லாரி லோடுக்கு ரூ.12 ஆயிரம் வரை உயா்ந்திருக்கிறது. இது 100 சதவீத விலை உயா்வாகும். இதனால் கட்டுமான ஒப்பந்ததாரா்கள், பொறியாளா்கள், விற்பனையாளா்கள், பொதுமக்கள், அரசு பணிக்கு ஒப்பந்தம் எடுத்திருப்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதுடன், கட்டுமானப் பொருள்கள் பழைய விலைக்கு கிடைப்பதை உறுதி செய்யவும், கல் குவாரிகளை அரசுடமையாக்கவும், ஆற்று மணல் குவாரிகளைத் திறக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி செய்துத்தர வேண்டும்:
கோவை பெரியநாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட குடியிருப்பில் குடியிருக்கும் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தங்களது குடியிருப்பில் சுமாா் 1,800 வீடுகள் இருக்கும் நிலையில், இதில் சுமாா் 600 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் இங்கு குடியேறி 6 மாதங்களாகியும், எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்யப்படவில்லை.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். எனவே, பழுதடைந்திருக்கும் சாலையை உடனடியாக சரி செய்து கொடுப்பதுடன், எங்களது குடியிருப்புக்கு அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.
கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 415 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
