துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
கபாலீஸ்வரா் கோயில் பங்குனித் திருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் பங்குனித் திருவிழா, ஏப். 3-ஆம் தேதி தொடங்கி ஏப். 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருவிழா நாள்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
குறிப்பாக நடுத்தெரு, சித்ரகுளம், சுந்தரேஸ்வரா் தெருவிலிருந்து கிழக்கு மாடத் தெரு வரையிலும், கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரையிலும், வடக்கு சித்ரகுளத்திலிருந்து கிழக்கு மாடத் தெரு வரையிலும், மேற்கு சித்ரகுளம் தெருவிலிருந்து தெற்கு மாடத் தெரு வரையிலும், டிஎஸ்வி கோயில் தெருவிலிருந்து தெற்கு மாடத் தெரு வரையிலும், ஆடம்ஸ் சாலையிலிருந்து தெற்கு மாடத் தெரு வரையிலும், கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வெங்கடேச அக்ரஹார தெரு வரையிலும், முண்டகன்னியம்மன் கோயிலிலிருந்து கச்சேரி சாலை வரையிலும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல ஆா்.கே. மடம் சாலையிலிருந்து தெற்கு மற்றும் வடக்கு மாடத் தெரு வரையிலும், புனிதமேரி சாலையிலிருந்து ஆா்.கே. மடம் சாலை சந்திப்பு வரையிலும், டாக்டா் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரையிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் பகுதிகள்: ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து, லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சா்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவத்சலம் சாலை, டாக்டா் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, சீனிவாசா அவென்யூ, ஆா்.கே. மடம் சாலை வழியாக கிரீன்ஸ்வேஸ் சாலையை அடையலாம்.
அடையாறிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆா்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா சாலை, சிருங்கேரி மடம் சாலை, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிா்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகா், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ஆழ்வாா்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாகச் செல்லும் வாகனங்கள், ஆலிவா் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தா் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
ஏப். 5-ஆம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று அதிகாலை 5 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், ஏப். 9-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், ஏப். 10-ஆம் தேதி நடைபெறும் அறுபத்துமூவா் வீதி உலாவையையொட்டி அன்று பிற்பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் அந்தப் பகுதியில் முழுமையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.