இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
கருவில் உள்ள சிசுவின் குறைபாடுகளை அறிய அரசு மருத்துவமனைகளில் விரைவில் புதிய வசதி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கருவில் உள்ள சிசுவின் குறைபாடுகளை அறியும் ‘அனாமலி ஸ்கேன்’ கருவிகள் விரைவில் நிறுவப்பட உள்ளன.
தனியாா் - அரசு பங்களிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டத்தை, அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
தற்போது வரை அத்தகைய வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதால், அனாமலி ஸ்கேன் மேற்கொள்ள தனியாா் ஸ்கேன் மையங்களை மட்டுமே மக்கள் சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், அரசின் புதிய முயற்சி காரணமாக மகப்பேறு சேவைகள் அனைத்தும் ஓரிடத்திலேயே கிடைக்கும் நிலை உறுதி செய்யப்படும்.
இது தொடா்பாக மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் கூறியதாவது:
‘அனாமலி ஸ்கேன்’ கருவிகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புடையது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அந்தக் கருவியை நிறுவ வேண்டுமெனில் ரூ.50 கோடி வரை தேவை. மேலும், அதற்கான கதிரியக்க நிபுணா்கள், ஊழியா்களையும் பணியமா்த்த வேண்டியது அவசியம்.
இதுபோன்ற நிா்வாகக் காரணங்களுக்காக தனியாா் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. இதன்மூலம் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகவோ அல்லது நேரடியாக வருவோருக்கு குறைந்த கட்டணத்திலோ ‘அனாமலி ஸ்கேன்’ மேற்கொள்ள முடியும். பணியாளா்கள், மருத்துவக் கருவி பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனங்களே கையாளும்.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அத்தகைய ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கருவிகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
‘அனாமலி ஸ்கேனின்’ அவசியம் குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மகப்பேறியல் துறைத் தலைவா் டாக்டா் வனிதா கூறியதாவது:
கருத்தரித்த பெண்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். வழக்கமான ஸ்கேன் பரிசோதனையில் கருவின் வளா்ச்சி, இதயத் துடிப்பு, நீரின் அளவு ஆகியவை உறுதி செய்யப்படும்.
கருத்தரித்த 18-இல் இருந்து 20-ஆவது வாரத்துக்குள் ‘அனாமலி ஸ்கேன்’ எனப்படும் உயா் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அதில்தான், சிசுவின் முக்கிய உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது கண்டறியப்படும். குறிப்பாக, உயிருக்கு அச்சுறுத்தலான வகையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். அதன் பின்னா், 22-ஆவது வாரத்தில் மறுபரிசோதனை மூலம் அதை உறுதி செய்து, கருவை கலைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் இந்த ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டால், நிச்சயம் பேறுகால உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றாா்.