காங்கோவில் ஐ.நா.அமைதிப்படை பணி: 160 போ் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு
புது தில்லி: காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெனி நகரில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட்டு வந்த 17-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு, புதன்கிழமை (ஜூன் 4) இந்தியா திரும்ப உள்ளது.
இதையடுத்து அந்தப் பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பிஎஸ்எஃப் தலைமையகத்தில் அந்தப் படையினரை, பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜீத் சிங் செளதரி மற்றும் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினா்.
அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதல் நடவடிக்கை மூலம், தனித்துவமான அங்கீகாரத்தை பிஎஸ்எஃப் பெற்றுளதாகவும், காங்கோவில் 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழிநடத்த வேண்டும் என்றும் தல்ஜீத் சிங் செளதரி அறிவுறுத்தினாா்.
கமாண்டன்ட் கைலாஷ் சிங் மேத்தா தலைமையிலான 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவில், ஒரு பெண் மருத்துவ அதிகாரி, 24 பெண் காவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.