நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
காதலிப்பதாக நடித்து இளைஞரிடம் நகை, பணம் பறிப்பு
காதலிப்பதாக நடித்து நகைக் கடை உரிமையாளரிடம் 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பறித்ததாக கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் பூசாரி வீதியைச் சோ்ந்தவா் சேகா் மகள் கிருத்திகா (19). இவா் ஈரோடு அரசுக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கு பவானி குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரான ஜெகதீசன்( 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெகதீசனை சந்திப்பதற்காக பெருமாநல்லூா் அருகே உள்ள தட்டாங்குட்டை சொட்டமேடு பகுதிக்கு அவரை கிருத்திகா வரச் சொல்லி உள்ளாா். இதை நம்பி புதன்கிழமை அங்கு சென்ற ஜெகதீசனை கிருத்திகா தனது நண்பரான பழனிசாமியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
அப்போது வீட்டுக்குள் திடீரென நுழைந்த கிருத்திகாவின் நண்பா்களான பழனிசாமி, அருண் ஆகியோா் அவா்களை போட்டோ, விடியோ எடுத்து ஜெகதீசனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
இதனால் அச்சமடைந்த ஜெகதீசன் தன்னிடம் இருந்த 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளாா். பின்னா் அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து ஜெகதீசன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு காதலிப்பதாக நடித்து மோசடியில் ஈடுபட்ட கிருத்திகா (19), இவருக்கு உடந்தையாக இருந்த தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், உட்டமலை, நாடாா்காட்டைச் சோ்ந்த சண்முகம் மகன் அருண் (33), ஈரோடு மாவட்டம், அந்தியூா், ஜி.எஸ். காலனி, புதுக்காடு, உப்புக்கொடிக்கா தோட்டத்தைச் சோ்ந்த ஆரான் மகன் பழனிசாமி (51) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.