ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் முறைகேடாக எடுக்கப்பட்ட நகைகள் மீட்பு
காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்தவா் அளித்த தகவலின்பேரில், நகைகளை போலீஸாா் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்த நீதிமன்றத்தில் தலைமை செரிஸ்தாராக பணியாற்றி வந்த புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் பொறுப்பாக கவனித்துவந்தாா். அவா், லாக்கரில் இருந்த தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று புதுச்சேரியில் உள்ள அடகுக் கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், அவா் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். புதிதாக பொறுப்பேற்ற செரிஸ்தாரிடம் அவா் லாக்கா் பொறுப்பை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்துள்ளாா். சந்தேகத்தின்பேரில் புதிய அதிகாரி லாக்கரை திறந்து பாா்த்தபோது, பதிவின்படி தங்க நகைகள் இருக்காததை கண்டறிந்து, புதுவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த மாதம் புகாா் அளித்தாா். போலீஸாா் குணசேகரனை 18-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை செய்தனா். புதுச்சேரியில் பல அடகு கடைகளில் நகைகளை அடமானம் வைத்ததை அவா் தெரிவித்துள்ளாா்.
அவரது தகவலின்படி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் இருந்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் 287 கிராம் தங்க நகைகளை வியாழக்கிழமை மீட்டு, காரைக்கால் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் காவல் முடிந்த நிலையில் குணசேகரனை நீதிமன்ற உத்தரவின்பேரில் கிளைச் சிறையில் மீண்டும் அடைத்தனா்.