மதுபோதையில் தகராறு: கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி!
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு
கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கார் ஓட்டுநர் ரமண ரெட்டியையும் கைது செய்துள்ளனர். பலியானவரின் மனைவி சீலி லுர்து மேரி உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சட்டெனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட தடேப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ரெண்டேப்பல்லாவுக்கு பேரணியாக காரில் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகப்படுத்தினர்.
இந்தநிலையில், சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.