நெல்லை: குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் உலா.. வீடு புகுந்து எண்ணெய் குடித்துச் சென்ற கரடி!
நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது. இதில், கரடிகள் உணவுக்காகவும், குடிநீரைத் தேடியும் பாபநாசம் மலையடிவாரப் பகுதிகளில் அடிக்கடி சுற்றி வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தது. நள்ளரவு நேரத்தில் குட்டிகளுடன் நடமாடியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் வி.கே.புரம், டாணா காளிபார்விளை பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் கரடி சர்வ சாதாரணமாக உலா வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை தினம் என்பதால் பொது மக்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் இருந்தால் கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் பெரும்பாலும் வருவதில்லை.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அணவன் குடியிருப்பு பகுதியில் தேன் பண்ணை அருகே மீண்டும் குட்டிகளுடன் பெண் கரடி உலா வந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் வெடி வெடிக்கச் செய்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று இரவில் அணவன் குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் வந்த கரடி, சுரேஷ்குமார் என்பவரின் வீட்டிற்குள் புகுந்தது. வீட்டின் முன்புறத்தில் தனியாக அமைக்கப்பட்டிருந்த பூஜையறைக்குள் புகுந்து சுவாமி படங்களை தட்டிவிட்டும், பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. பின்னர், விளக்கேற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை திறந்து எண்ணெய் முழுவதையும் குடித்துச் சென்றது.

கரடியின் உறுமல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சுரேஷ்குமார், பூஜை அறைக்குள் இருந்து கரடி வெளியேறிச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார்கள். அப்பகுதியில் கூண்டு வைத்து சுற்றித்திரியும் கரடியை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.