தட்கல் டிக்கெட் - ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம்
விரைவு ரயிலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி இந்திய ரயில்வே அறிவுறுத்தியிருக்கிறது.
விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
தட்கல் டிக்கெட் என்றால், ஒரு விரைவு ரயிலில் பயணம் செய்ய, அந்த விரைவு ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் முன்பதிவு தொடங்கும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு இருக்கும் முறைகேடுகளைத் தடுகக் சிலக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஐஆர்சிடிசி கணக்குடன் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது. அதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் அட்டையில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்டு, அதனை உள்ளிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எனவே, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் அந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

1. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவுக்கான கணக்கு வைத்திருக்கும் பயனர்கள், ஐஆர்சிடிசி இணையதளத்துக்குச் சென்று லாக் இன் செய்ய வேண்டும்.

2. அதில் எனது கணக்கு (மை அக்கவுண்ட்) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதில், பயனர்களின் ஆதார் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களுக்கான படிவம் இருக்கும்.
4. உரிய விவரங்களை அளித்து ஓடிபி பெற்று அதனை உள்ளிடவும்.

5. அனைத்தும் சரியாக இருப்பின், உங்கள் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற செய்தி வரும்.
6. ஒருவேளை, படிவம் சப்மிட் செய்யப்படவில்லை என்றால் எச்சரிக்கை தகவல் வெளியாகும்.
7. உடனடியாக நீங்கள் அளித்த தகவல்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து தவறுகள் இருந்தால் சரி செய்து சப்மிட் செய்யலாம்.