ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்
ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது இந்த போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதத்தாக்குதலின்போது ஈரானின் எப்-14, எப்-5 மற்றும் ஏஹெச்-1 விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் விமானநிலையத்தின் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்ப பயன்படும் விமானமும் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவதையும் ஈரானின் விமானப்படை செயல்பாட்டையும் இஸ்ரேல் சீர்குலைத்துள்ளது என்றும் கூறியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷியா சென்று அதிபர் புதினை சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.