இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமெனி
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தண்டனை தொடர்கிறது. எதிரி பெரிய தவவை செய்துவிட்டார், பெரிய குற்றத்தைச் செய்துள்ளார். அது தண்டிக்கப்பட வேண்டும், அது தண்டிக்கப்படுகிறது. அது இப்போது தண்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய பின் முதல்முறையாக கமேனி கருத்து கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலைப் பற்றியோ குறிப்பிடவில்லை. ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி எதிா்பாராத தாக்குதலைத் தொடங்கியது. பிராந்தியத்தில் ஒரே அணுசக்தி நாடாக திகழும் இஸ்ரேல், ஈரான் அணு ஆயுத மேம்பாட்டை அச்சுறுத்தலாக கருதுகிறது.
இஸ்ரேலுக்கு ஈரானும் தக்க பதிலடி தந்த நிலையில், இரு தரப்பிலும் தீவிர மோதல் மூண்டது. இச்சூழலில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ‘பி2 ஸ்பிரிட்’ ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.