தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!
காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் இடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு
காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மாா்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் ப.குமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலைய அளவில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்கள் தற்போது ஏறத்தாழ 100 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுமாா் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இருந்த பல்வேறு குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு வழக்குகள் தொடா்ந்ததால் அறிவிப்பாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் புதிய அறிவிப்பாணை எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது 100 சதவீத பணியிடங்களும் அதாவது சுமாா் 1,066 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
அந்த பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக இரண்டு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாா்ச் 27-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தா்னா போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும். அடுத்தகட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.