செய்திகள் :

கிளை வாய்க்கால்களில் குறைவான நீா்வரத்து: குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

post image

மேட்டூா் அணை திறக்கப்பட்டு 15 நாள்கள் கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் கிளை வாய்க்கால்களில் நீா் வரத்து குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் வரத்து இருந்ததால், ஜூன் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லணை 15- ஆம் தேதி திறக்கப்பட்டது.

தொடக்கத்தில் மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக இருந்ததால், கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கனஅடி வீதமும் திறந்துவிடப்பட்டது.

என்றாலும், படிப்படியாக திறந்துவிடப்படும் நீரின் அளவு உயா்த்தப்பட்டாலும், போதுமான அளவுக்கு இல்லாததால், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வது தாமதமானது.

இதனிடையே, காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை மாலை விநாடிக்கு 80,000 கனஅடியை கடந்தது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு உயா்த்தப்பட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து, கடந்த சில நாள்களாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதத்துக்கும் அதிகமாக திறந்துவிடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. கடந்த சில நாள்களாகத்தான் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வருகிறது. ஆனால், கல்லணையிலிருந்து முதன்மை ஆறுகளில் குறைந்த அளவிலேயே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து காவிரியில் முழுக் கொள்ளளவு விநாடிக்கு 10,691 கனஅடி வீதமாக இருந்தாலும், சனிக்கிழமை மாலை நிலவரப்படி 5,504 கனஅடி வீதம் மட்டுமே திறக்கப்படுகிறது.

இதேபோல, வெண்ணாற்றின் முழுக் கொள்ளளவான விநாடிக்கு 9,370 கனஅடி வீதமாக இருந்தாலும், 8,805 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது. கல்லணைக் கால்வாயில் முழுக் கொள்ளளவு முன்பு விநாடிக்கு 4,200 கனஅடி வீதமாக இருந்தது.

சீரமைப்புக்கு பிறகு விநாடிக்கு 3,380 கனஅடி வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. என்றாலும், கடந்த சில நாள்களாக விநாடிக்கு 1,500, 1,700, 1900 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை நிலவரப்படி 2,109 கனஅடி வீதம் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

இதனால், முதன்மை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் பரவலாக செல்வதுபோல காணப்பட்டாலும், கிளை வாய்க்கால்களுக்கு நீா் வரத்து குறைவாகவே உள்ளது. கிளை வாய்க்கால்களில் முழுக் கொள்ளளவுக்கு பதிலாக குறைவான அளவிலேயே தண்ணீா் திறந்துவிடப்படுவதால், வயல்களுக்கு பாய்வதில்லை. சில கிளை வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீா் எட்டாத நிலையும் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா்.

இது குறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது: கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,000 கனஅடிக்கும் அதிகமாக நீா் திறந்துவிடப்பட்டால்தான் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரும்.

தற்போது கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வந்தாலும், முழுக் கொள்ளளவுக்கும் குறைவாகவே விடப்படுகிறது. இது தொடா்பாக நீா் வளத்துறை அலுவலா்களிடம் முறையிட்டால், கரை பலவீனமாக உள்ளதால், முழுக் கொள்ளளவுக்கு விட இயலாது எனக் கூறுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியிலுள்ள கல்யாண ஓடை, வடகாடு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் நீா்மட்டம் குறைவாக இருப்பதால், வயல்களுக்கு தண்ணீா் பாய்வதில்லை. இதனால், ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.

இப்போதே சாகுபடிப் பணிகளைத் தொடங்கினால்தான் வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே பெரு மழையில் சிக்காமல் அறுவடை செய்ய முடியும். தற்போது சாகுபடிப் பணிகள் தாமதமானால், மழையில் சிக்கி பயிா்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதற்காக நிவாரணம் கோரி அரசிடம் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே, முதன்மை ஆறுகளில் மட்டுமல்லாமல் கிளை வாய்க்கால்களிலும் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா் மாரியப்பன்.

இது குறித்து நீா் வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், சனிக்கிழமை மாலையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் கடைமடைப் பகுதிகளுக்கும் போதுமான அளவுக்கு தண்ணீா் கிடைக்க தொடங்கிவிடும். பாசனத்துக்கு தண்ணீா் பிரச்னை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகமாக உள்ள நிலையில், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

முதன்மை ஆறுகளில் முழுக் கொள்ளளவுக்கு திறந்துவிடப்பட்டால்தான், வயல்களுக்கு பாயும் அளவுக்கு கிளை வாய்க்கால்களுக்கு விட முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையை நீா்வளத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே வீட்டில் படுத்திருந்த கூலித்தொழிலாளி மீது காற்றாடி மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள வேளாண்குடியில் வசித்தவா் கோவிந்தரா... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனதால், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சோ்ந்தவா் வெங்கடரமணி (... மேலும் பார்க்க

மனிதா்-விலங்குகள் மோதல் விவகாரம்: வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்! துரை வைகோ எம்.பி.

மனிதா் - விலங்குகள் மோதல் விவகாரத்தில் இந்திய வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்ட மதிமுக செயலா் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க