மனிதா்-விலங்குகள் மோதல் விவகாரம்: வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்! துரை வைகோ எம்.பி.
மனிதா் - விலங்குகள் மோதல் விவகாரத்தில் இந்திய வன திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்ட மதிமுக செயலா் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையொட்டி சனிக்கிழமை திருப்புறம்பயத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, உயிரிழந்த ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
பிறகு, காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காவிரி உழவா் பாதுகாப்புச் சங்கத்தினா் துரை வைகோவிடம் அளித்தனா்.
இது குறித்து துரை வைகோ கூறுகையில், மனிதா் - விலங்குகள் மோதல் விவகாரத்தில் இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் 1972 -இல் பல்வேறு திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி ஜூலை 22-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் வலியுறுத்துவேன் என்றாா்.
அவருடன், மாநில துணை பொதுச் செயலா் ரா. முருகன் உள்ளிட்டோா் இருந்தனா்.