யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
நமது நிருபர்
கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை:
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
கீழடி அகழாய்வு 2014}15 மற்றும் 2015}16 ஆகிய இரண்டு கட்டங்களாக ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் கீழ் நடத்தப்பட்டது. அவரை மத்திய அரசு பாதியிலேயே பணியிடம் மாற்றியது. பின்னர், முக்கியமான கண்டெடுப்புகள் எதுவும் இல்லை என்று கூறி மூன்றாம் கட்ட அகழாய்வை நிறுத்தியது.
2018}ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை இந்தப் பணியை மேற்கொண்டு, இதுவரை 15,000}க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி கி.மு. 6}ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செழிப்பான நகர்ப்புற நாகரிகம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின் விரிவான அறிக்கை 2023, ஜனவரியில் அத்தொல்லியலாளர் மூலம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பிக்கப்பட்டது.
இதை ஏஎஸ்ஏ 2025 மே 21}ஆம் தேதி அவரிடம் திருப்பி அனுப்பி, அதிக நம்பகத்தன்மைக்காக மேம்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்கக் கோரியது.
இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பன்னாட்டுத் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் நடத்தப்பட்ட கார்பன்டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகளைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை பல நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மேலும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.