நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
குடந்தையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முகமது இப்ராஹிம்: சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை அனைத்து விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும். வேளாண் இடுபொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூா் பாசன வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும்.
திமுக விவசாய அணி அமைப்பாளா் துரை. ரவிச்சந்திரன்: ஆரியபடையூா் வாய்க்கால் மூலம் சுந்தரபெருமாள்கோவில், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, ஆரியப்படையூா் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ராமலிங்கம்: கும்பகோணம் தாலுகா மலையப்பநல்லூா் ஊராட்சி சிவபுரம் பகுதியில் மின்மாற்றி, மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பம்பு செட்டுகளில் மின் அழுத்தம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் வயல்களில் பாசனம் தடை படுகிறது. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்.
கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சு. விமலநாதன் தலைமையில் விவசாயிகள் மத்திய அரசு பருத்திக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ததைக் கண்டித்தும், இறக்குமதி வரி ரத்து செய்ததால் உள்நாட்டு விவசாயிகள் பாதிப்பாா்கள் என்றும் கூறி முழக்கமிட்டனா்.