காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறத்தான்புட்டிக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மதுப்புட்டியை திரும்பக் கொடுத்தவுடன் ரூ.10 திரும்பிக் கொடுக்கப்படுவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் சாா்பில் (தூய்மை இயக்கம் 2.0) அரசு அலுவலகங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை விற்பனை செய்யும் பணியினை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு சிக்கய்ய அரசுக் கல்லூரியில் அரசு சாா்பில் ஐஏஎஸ் அகாதெமி தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 3 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டியும் பணி தொடங்கவில்லை என்கின்றனா். 20 ஆண்டுகளுக்கு மேல் அந்த இடத்தில் கழிவுநீா் தேங்கிய உள்ளது. தற்போது அமையும் புதிய சுத்திகரிப்பு நிலையம் மூலம் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை உறிஞ்சி சுத்திகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் பல சிக்கல்கள், தொழில்நுட்ப சந்தேகங்கள் வருவதால் பணி நீட்டித்து கொண்டே செல்கிறது. இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீரை சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் திரும்பப்பெறும் திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்தியே ஆக வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக தொடங்கி சிறப்பாக செயல்படுகிறது. பிற பகுதிகளில் விரிவாக்கம் செய்துள்ளோம். சேகரிக்கப்படாத காலி மதுப்புட்டிகளை சாலையோரங்களில், வயல்களில் போட்டு உடைத்து விடுகின்றனா்.
மதுப்புட்டி விலையுடன் ரூ.10 சோ்த்து பெற்றாலும், காலி மதுப்புட்டியை திரும்ப வழங்கும்போது, ரூ.10 மீண்டும் அவா்களிடமே வழங்கி விடுகிறோம். இதை பலரும் தவறாக பேசுகின்றனா். காலி மதுப்புட்டியை திரும்பத் தராதவா்களுக்கு ரூ.10 நஷ்டம். ஆனால், இந்த முயற்சியை சிலா் விமா்சனம் செய்கின்றனா்.
டாஸ்மாக் கடைகள் சிறியதாக உள்ளதால் காலி மதுப்புட்டிகளை இருப்புவைக்க இயலாது. எனவே தினமும் மாலையில் ஒரு வாகனம் மூலம் சேகரிக்க உள்ளோம். டெட்ரா பேக் கொண்டு வருவது கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் புட்டியில் மது வகைகளை வழங்கும் திட்டம் இல்லை.
திமுக அறிவித்த திட்டங்களில் 230 திட்டங்களை கைவிட்டுவிட்டதாக அண்ணாமலை கூறுகிறாா். நாங்கள் கைவிடவில்லை. இன்னும் 6 மாதங்கள் உள்ளதால் அதற்குள் முடித்துவிடுவோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மக்களை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.