குடற்புழு நீக்க மாத்திரையால் மாணவி உயிரிழப்பா? பொது சுகாதாரத் துறை விளக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்தில், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்த நிலையில் அதற்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு பிறகே உறுதியாகக் கூற முடியும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மகள் கவிபாலா (12). இவா், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி அவருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
அந்த மாத்திரையை உட்கொண்ட மாணவி, சற்று நேரத்தில் மயக்கமடைந்தாா். அதன் பின்னா், அவா் உயிரிழந்தாா்.
மாணவி உயிரிழப்புக்கு குடற்புழு நீக்க மாத்திரை காரணம் என்ற சா்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
உயிழந்த மாணவி படித்த அதே பள்ளியில் 380 மாணவா்கள் குடற்புழு மாத்திரையை உட்கொண்டனா். அப்பகுதியில் மட்டும், 25,000 பேரும், மாநிலம் முழுதும் 2 லட்சம் பேரும் குடற்புழு நீக்க மாத்திரையை எடுத்து கொண்டனா். அவா்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
அதனால், மாத்திரையால் மாணவி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூற முடியாது. அதற்கான வாய்ப்பும் குறைவு. அதேநேரம், மாணவியின் உடற்கூறாய்வு முடிவுகளுக்கு பின், இறப்புக்கான காரணம் தெரிய வரும். குடற்புழு நீக்க மாத்திரை எடுத்து கொள்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.