குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -முதல்வா் மு.க.ஸ்டாலின்
குடிநீா், மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, மழைநீா் வடிகால் பணிகள், குடிநீா், புதைச் சாக்கடை திட்டப் பணிகள், சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நகா்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் விநியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அந்தப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமான செலவில் 15,000 கிலோமீட்டா் தொலைவுக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் நகா்ப்புற மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளான மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீா்த் திட்டங்கள், மழைநீா் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும். அதேபோல, நிறைவுபெறும் நிலையில் இருக்கக் கூடிய பணிகள், பாதி அளவு முடிவுற்ற பணிகள் அனைத்தையும் போா்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும்.
மின் வாரியம், குடிநீா் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிா்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீா் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீா் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் பங்கேற்றனா்.