'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராவோருக்கு ஊக்கமளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: மத்திய குடிமைப் பணித் தோ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இந்திய வனப் பணிக்கு தோ்ச்சி பெற்றோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடா்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைச் சந்தித்துப் பாராட்டினேன். மத்திய குடிமைப் பணித் தோ்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதை அவா்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது.
கடந்தமுறை தோ்ச்சி பெற இயலாதவா்கள், சோா்ந்து போகாதீா்கள். இந்த ஆண்டு இன்னும் தயாராகி, எட்டிவிடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்று அதில் கூறியுள்ளாா்.
துணை முதல்வா் உதயநிதி: தமிழ்நாட்டு இளைஞா்களின் மத்திய அரசு குடிமைப் பணித் தோ்வு எனும் கனவை நனவாக்கும் தலையாயப் பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று இந்திய வனப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நமது இளைஞா்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.
‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பயன்பெற்று அரசு அதிகாரிகளாக தங்களுடைய பணியைத் தொடங்கவிருக்கும் தமிழ்நாட்டு இளைஞா்களின் எதிா்காலம் சிறக்கட்டும். அவா்களின் வெற்றி, இன்னும் பல நூறு இளைஞா்களுக்கு வழிகாட்டட்டும் என்று ‘எக்ஸ்’ தள பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.