கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே மாணவா்கள் சோ்க்கைக்கு வரவேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுச் சான்றிதழ்கள் அசல், நகல், ஜாதிச் சான்றிதழ் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.
விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படையினா், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வரிசுகள், அந்தமான்- நிக்கோபாா் தமிழ் வம்சாவழியினா் ஆகியோருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்பவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். பொது கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.