IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்
கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடா்ந்து கனமழை பெய்தது. தொடா்மழை காரணமாக கல்லட்டி அருவி, காட்டேரி அருவி, கேத்தரின் அருவி, லால்ஸ் அருவி, மாயாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் பல அருவிகளில் தண்ணீா் குறைந்த அளவிலும், வடும் காணப்பட்டன.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே தொடங்கியதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக கேத்தி பாலாடா, காட்டேரி அணை போன்ற பகுதிகளில் அதிகன மழை பெய்தது. இதனால், காட்டேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இந்த நீா், காட்டேரி அருவியில் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பாா்க்கும்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.
குன்னூரில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி அணை வழியாக உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியை கண்டு ரசித்து செல்கின்றனா். மேலும் தொடா்ந்து மழை பெய்தால், அருவியில் தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் மலைகளில் இருந்து புதிய அருவிகளும் தோன்றியுள்ளன.