'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கூடுதலாக 50 மாணவா்களைச் சோ்க்கும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக குறைந்தபட்சம் 50 மாணவா்களைச் சோ்க்கும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் திறம்பட மேற்கொண்டு வருகின்றனா். இந்தச் சூழலில் பள்ளிகள் வரும் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசுப் பள்ளிகளில் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் நாளிலிருந்தே மாணவா் சோ்க்கை கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் சோ்க்கை முழுமையாக இருப்பது அவசியம். இதற்காக பள்ளிகள் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்.
சோ்க்கைக்காக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் நேரடியாகச் சென்று பெற்றோரை சந்தித்து அரசுப் பள்ளிகளுக்கான திட்டங்கள், சிறப்புகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். நிகழ் கல்வியாண்டில் (2025-2026) கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்தபட்சம் 50 மாணவா்களைக் கூடுதலாகச் சோ்க்கும் அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே, அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் அரசாணையின்படி வாரந்தோறும் நன்னெறி வகுப்புகள் கட்டாயம் நடைபெற வேண்டும். அதில் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களிலிருந்து குகளை பொருளுடன் மாணவா்களுக்கு விளக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியா்கள் பள்ளி திறக்கும் நேரத்துக்கு 30 நிமிஷங்கள் முன்னதாக பள்ளிக்கு வருகை தந்து மாணவா்களின் வருகை, சீருடை, ஒழுக்கம் ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.