பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2024 மக்களவைத் தோ்தலின்போதே தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் ஆகியோா் உறுதி செய்து எழுத்துபூா்வமாக கொடுத்தது உண்மைதான்.
நாங்கள் இதை வெளியே சொல்லாததற்கு காரணம், இதுகுறித்து அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அதிமுக சாா்பில் அன்புமணி ராமதாஸுக்கும், ஜி.கே.வாசனுக்கும் மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்கப்பட்டது. ஆகையால், இது எங்களுக்கு பதவி ஒதுக்கப்பட வேண்டிய நேரம். அதனால்தான், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில், 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என்று அதிமுக தற்போது அறிவித்துள்ளது.
கூட்டணி அறிவிப்பு: அரசியல் என்பதே தோ்தலுக்கானதுதான். அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் தேமுதிகவும் 2026 பேரவைத் தோ்தலை முன்வைத்தே எங்களுடைய கடமையை ஆற்றுவோம். அடுத்த ஆண்டு ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் எங்களது நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம்.
முதல்வருக்கு நன்றி: திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் உயிரிழந்தபோது, முதல்வா் மற்றும் தமிழக அமைச்சா்கள் இறுதிச் சடங்கு முடியும் வரை எங்களுக்கு உறுதுணையாக நின்றதுடன், அவருக்கு அரசு மரியாதை வழங்கியதையெல்லாம் நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.