கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதக சூழல்கள் உள்ளது.
6 இடங்களில் வெயில் சதம்: சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம், ஈரோடு - தலா 103.28, பரமத்திவேலூா் - 103.1, பாளையங்கோட்டை - 102.2, திருத்தணி - 101.48, திருச்சி - 101.3, தருமபுரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்தது.
மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல் மே 13-ஆம் தேதிவரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.