கோடையில் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டால் ஒருபக்கம் மின் விசிறிகளும், ஏசிகளும், குளிர்பதனப் பெட்டிகளும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
இதனால், நாம் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், மின் கட்டணத்திலிருந்து தப்பிக்க முடியாது.
எனவே, மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்தினால், மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
பொதுவாக ஏற்கனவே ஏசி வைத்திருப்பவர்கள் எப்போதும் 24 - 26 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்நிலையிலேயே பயன்படுத்துவது நல்லது.
ஏசியை ஒரு அறையின் எந்தப் பகுதியில் வைத்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். திறந்த அலமாரிகள் அதிகம் இருக்கும் அறையில் ஏசி இயங்குவதால் அதிக மின்சார செலவு ஏற்படலாம்.
புதிதாக ஏசி வாங்குவோர், இன்வெர்ட்டர் கொண்ட ஏசிகளை வாங்குவது நல்லது. அது தேவைக்கேற்ப கம்ப்ரசரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
மின் விசிறி பற்றி சொல்லவே வேண்டாம். அறையில் இருக்கும்போது மறக்காமல் சுவிட்ச் ஆன் செய்வதைப்போல, அறையை விட்டு வெளியே போகும்போது மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள். மின் விசிறிகளை சுத்தமாகப் பராமரிப்பது நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும்.
எந்த மின்னணு சாதனங்களையும் இயக்கிய பிறகு மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.
குளிர்பதனப் பெட்டியை சுத்தமாக வைத்திருப்பதும், அடிக்கடி திறக்காமல், தேவைப்படும் பொருள்களை ஒரே நேரத்தில் எடுத்து, ஒரே நேரத்தில் வைப்பதும், குளிர்பதனப் பெட்டி முழுக்க பொருள்கள் இருக்குமாறு வைத்துக் கொள்வதும் நல்லது.
வாஷிங் மெஷினில் கொஞ்சம் துணி இருக்கிறது என்று போட்டுவிடாமல், அதன் கொள்ளளவு நிரம்பும் வகையில் துணியைப் போடுவதால், மின்சாரத்தை சேமிக்கலாம்.
டிவியை தற்போது வைஃபையுடன் இணைத்துவிட்டால், சிலர் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பு வந்தால், டிவியை ஸ்டாப் செய்து பேசிக் கொண்டிருப்போம். பிறகு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவ்வாறு சென்றாலும் டிவிதான் ஸ்டாப் ஆகியிருக்குமே தவிர மின்சாரம் அல்ல என்பதை மனதில் வைத்து டிவியை ஆஃப் செய்யவும்.
உங்கள் வீட்டில் ஒவ்வொரு பொருள்களையும் இயக்கிப் பார்த்து எப்போது மின் மீட்டர் அதிகம் ஓடுகிறது என்பதை கவனித்து அந்தப் பொருளில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்யலாம்.