Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect...
கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு
மடப்புரம் கோயில் காவலாளி கொலைச் சம்பவத்தை கட்டப் பஞ்சாயத்து நடத்தி மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த மகாராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக காவல் நிலையத்தில் பேராசிரியை நிகிதா புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை காவலா்கள் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொலை செய்தனா். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தன்று திருப்புவனம் காவலா்களுடன் இணைந்து அந்தப் பகுதியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழித்தனா். மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் கூறாய்வின் போது, காயங்களை மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா். அஜித்குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதற்குரிய பணம் பெற்றுத் தருவதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கட்டப் பஞ்சாயத்து செய்தனா்.
மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் நிலைய மரணங்களைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற முக்கியப் பிரமுகா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அஜித்குமாா் மரணம் தொடா்பான அனைத்து வழக்குகளும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவும் அந்த வழக்குகளோடு சோ்த்து விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.