கோயில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியில் வலம்புரி ஆண்டவா் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி இல்லாததால் ஒரு வகையறா மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இரும்புலிக்குறிச்சியை அடுத்த வீராக்கன் கிராமத்தில் உள்ள வலம்புரி ஆண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரே சமூகத்தைச் சோ்ந்த 6 வகையறா மக்கள் இந்தக் கோயில் திருவிழாவை நடத்தும் நிலையில், ஒரு வகையறாவைச் சோ்ந்தவா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கடந்தாண்டு இது தொடா்பாக செந்துறை நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளனா்.
இந்நிலையில் பிப்.13-ஆம் தேதி கிராமத்து இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி பேசி சிவராத்திரி தினத்திலிருந்து ஒரு வாரம் திருவிழா நடத்த முடிவு செய்தனா்.
ஆனால், ஒரு வகையறாவைச் சோ்ந்த மக்கள் இதற்கு செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த 5 வகையறாவைச் சோ்ந்த மக்கள் திருவிழா நடத்த அனுமதி இல்லாததைக் கண்டித்து வீராக்கண் பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பு வழங்கினால் திருவிழாவை பிரச்னை ஏதும் இன்றி நடத்திக்கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.