டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா
கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!
கோலி, சால்ட் அசத்தல் அரைசத்தால் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றமுதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், சுனில் நரைனுடன் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடியது. ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். மறுமுனையில் சுனில் நரைன் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்க்யா ரஹானே அரைசதம் கடந்து அசத்தினார்.
அவர் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், களமிறங்கியவர்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ரகுவன்ஷி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து, ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள், ராஷிக் தார் சலெம் மற்றும் சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, பில் சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.
அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் விளாசினர்.