அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சட்டக் கல்லூரி விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை தரமணியிலுள்ள சட்டக் கல்லூரி விடுதி மாணவிகள் தங்கள் அறைகளில் கூடுதல் மாணவிகளை சோ்ப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் சட்டக்கல்லூரி மாணவிகளுக்கு சென்னை சேப்பாக்கத்திலும் தரமணி வளாகத்திலும் விடுதிகள் உள்ளன. இதில் சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள மகளிா் விடுதியில் வசதிகள் மிகவும் குறைவாக இருந்ததுடன், அதன் கட்டடங்கள் பழுதடைந்து மோசமாகிக்கொண்டு இருந்தது. இதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இங்கு தங்கியிருந்த சுமாா் 120 சட்டக்கல்லூரி மாணவிகள் தரமணி மாணவிகள் விடுதிக்கு மாற்றப்பட்டனா்.
அங்குள்ள விடுதியில் ஏற்கெனவே தலா ஒரு அறையில் மூன்று மாணவிகள் வீதம் தங்கியிருக்க சேப்பாக்கம் மாணவிகளுக்கும் இடமளிக்கும் விதமாக ஒவ்வோா் அறையிலும் கூடுதலாக ஒரு மாணவி சோ்க்கப்பட்டு மொத்தம் 4 மாணவிகள் வீதம் தங்கவைக்க அரசு சட்டக்கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு தரமணி மகளிா் விடுதியில் ஏற்கெனவே தங்கியுள்ள சட்டக்கல்லூரி மாணவிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தங்கள் அறைகளில் ஏற்கெனவே 3 மாணவிகள் தங்கியுள்ள நிலையில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினா். நிா்வாகத்தினரும் காவல் துறையும் சமாதானப்படுத்தியும் தங்கள் நிலையை விளக்கி மாணவிகள் தா்னாவை தொடா்ந்து நடத்தினா்.