தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!
இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியிருக்கிறது.
அதாவது, இதுவரை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.12ஆக இருந்த நிலையில், தற்போது இது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது,
அதாவது, தேவை அதிகமாக இருக்கும்போது, அதன் மூலம் லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டண உயர்வானது ஸ்விக்கியின் வழக்கமான கட்டண உயர்வுகளில் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பிளாட்ஃபார்ம் கட்டணம் சப்தமே இல்லாமல், படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
அதாவது, பயன்பாட்டுக் கட்டணம் கடந்த 2023 ஏப்ரல் மாதம் ரூ.2 ஆக இருந்தது, ஜூலை 2024 இல் ரூ.6 ஆக உயர்ந்தது, அக்டோபர் 2024 இல் ரூ.10 ஆக உயர்ந்தது, இப்போது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 600 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறது.
ஸ்விக்கியில் தற்போது நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. எனவே, இந்தக் கட்டணங்களிலிருந்து நாள்தோறும் வரும் வருவாய், கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தக் கட்டண உயர்வு குறித்து நிறுவனம் எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.
குறிப்பாக, ஸ்விக்கி மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான ஜொமாட்டோ என இரண்டு நிறுவனங்களுமே தேவை அதிகரித்த காலங்களில் அதிக பிளாட்ஃபார்ம் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
இந்த கட்டண உயர்வுக்குப் பிறகும், உணவு ஆர்டர்கள் வருவதில் எந்தக் குறைவும் ஏற்படாத நிலையில் இந்தக் கட்டணத்தையே அவை மாற்றமில்லாமல் வைத்துக்கொள்கின்றன.
2025 - 26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஸ்விக்கி நிறுவனம் தனது நிகர நஷ்டம் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்த சில நாள்களுக்குப் பின் இந்த பயன்பாட்டுக் கட்டண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த நஷ்டத் தொகை முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.611 கோடியாக இருந்தது. விரைவு விநியோகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் இந்த இழப்புகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.