உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 2 போட்டிகளில் இருந்து விலகிய மெஸ்ஸி!
சமயபுரம் தல வரலாறு: அர்த்த ஜாமத்தில் கொலுசுச் சத்தம்; அம்மனே நமக்காக விரதம் இருக்கும் அதிசயம்
ஶ்ரீரங்கம், 108 திவ்ய தேசங்களில் தலைமைப்பீடம். அங்குதான் ஆதியில் கோயில் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அண்ணன் அரங்கன் அமைதியே உருவான சாந்தமூர்த்தி. ஆனால் தங்கையோ ருத்ர ரூபிணி. அவளின் ருத்ராம்சம் பொறுக்கமுடியாமல் திண்டாடினர் பூசகர்கள். அவள் சினம் தணிக்க வழி தேடினர். அப்போது அந்தக் கோயிலின் ஜீயர் சுவாமிகள் ஒரு முடிவெடுத்தார். கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் ஆங்கார ரூபிணியாகத் திகழும் இந்த அன்னையை வேறு இடத்துக்கு மாற்றிப் பிரதிஷ்டை செய்து வழிபடலாம் என்று முடிவு செய்தனர். அன்னையின் திருவுருவைச் சுமந்துகொண்டு பக்தர்கள் காட்டுப்பாதையில் பயணித்தனர்.
காட்டுப்பாதையைக் கடந்ததும் கைவிடப்பட்ட ஓர் அரண்மனை மேட்டை அடைந்தனர் பக்தர்கள். அது ஒரு கைவிடப்பட்ட கோட்டை. சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாகத் தரக் கட்டிய கோட்டை. அதுவே கண்ணனூர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் அதைச்சுற்றியிருந்த நகரமும் அழிக்கப்பட்டன. அந்த இடம் வேப்பமரக் காடாயிற்று.

வேப்பங்காட்டுக்குள் இருந்த அரண்மனை மேட்டை அடைந்த ஶ்ரீரங்கத்து பக்தர்கள், அதுவே அம்பாள் கோயில் கொள்ளத் தகுந்த இடம் என்று முடிவு செய்து ஓர் ஓலைக்குடிசை கட்டி அம்பாள் திருவுருவை அதில் வைத்து விட்டு அப்படியே சென்றுவிட்டனர். ‘கண்ணனூரில் கோயில்கொண்ட அம்மன் அவள் என்பதால் ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று அவளுக்குப் பெயராயிற்று.
வேப்பங்காற்று அவளைக் குளிர்வித்தது. கொஞ்சம் சாந்தமானாள் தேவி. தான் கோயில்கொண்ட இடத்தைச் செழிக்கச் செய்ய மனம் கனிந்தாள். இந்த நிலையில் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார்.
அப்போது அங்கிருந்த அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்தான். அன்னையின் தோற்றமே அவனுக்குப் பெரும் தைரியத்தைக் கொடுத்தது. "தாயே நான் தொடங்கப்போகும் போரில் எனக்கே வெற்றி கிடைக்க அருள்வாயாக. போர் முடிந்து முடி சூடியதும் திரும்பிவந்து உனக்கு ஓர் அற்புதக் கோயிலைக் கட்டிக்கொடுக்கிறேன்" என்று வேண்டிக்கொண்டான்.
கண்ணபுரத்தாளிடம் வேண்டிக்கொண்டால் எதுதான் கிடைக்காது... வெற்றி அவன் வசமானது. திரும்பிவந்த மன்னன் பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, கோயில்கட்டிக் குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
அதுவே மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமைப்பீடமாகத் திகழும் சமயபுரம் மாரியம்மன் கோயில். ஏழைகளுக்கு இரங்குபவள் அந்தத் தாய். நீதி வழங்குவதில் ஈடு இணையற்றவள்; பாதிக்கப்பட்டவரின் கண்ணீருக்கு இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும். தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள். அம்மா என்று அழைத்தால் ஓடிவந்து காப்பவள். கருணையே வடிவானவள். அதனால்தான் இன்றும் லட்சோப லட்சம் மக்கள் நாடிவந்து வணங்கிச் செல்கின்றனர்.
சுகவாழ்வு தரும் சுகாசினி
கருவறையில் அம்பாள் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்பாலிக்கிறாள் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
இவள் திருமேனியோ மூலிகைகளால் ஆனது. எனவே அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் அன்னை இங்கே சூட்சும ரூபத்தில் வலம் வருவதாக ஐதிகம். அவ்வாறு அன்னை நகர்வலம் வருகையில் அன்னையின் கால் கொலு ஒலி கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் அநேகர். 'இன்றும் அந்த கொலுசுச் சத்தம் அர்த்த ஜாமத்தில் கேட்கிறது' என்கிறார்கள் பக்தர்கள்.
தீராத நோய் தீர்ப்பாய் தாயே...
நோய்களின் அதிபதியான மாயாசுரன் பூலோகத்தில் நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். இதனால் அன்னையின் பக்தர்களும் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதிதேவி, மாயாசுரனை வதம் செய்யும்படி தன் அம்சமான மாரியம்மனை அனுப்பினாள்.
மாரியம்மன் மாயாசுரனையும் அவன் சகோதரர்களையும், வதம் செய்தாள். பின்னர் அவர்களின் தலையை ஒட்டியாணமாக அணிந்துகொண்டு, நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள்புரிந்தாள். அவளே ஆதியில் திருவரங்கத்தில் வைஷ்ணவி தேவியாக அருள்பாலித்தாள். பின்னர் சமயபுரத்துக்கு வந்து மாரியம்மனாக அருள் பாலிக்கிறாள் என்றும் சொல்கிறது ஸ்தலவரலாறு.
இன்றும் சமயபுரத்தாள் நோய் தீர்க்கும் மருத்துவச்சியாகவே மக்களால் வணங்கப்படுகிறாள். இவள் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத நோய் தீர்கிறது. நம் துன்பங்கள் தீர அன்னையே பச்சைப் பட்டினி கிடந்து தவம் இருக்கும் அதிசயம் இன்றும் நடக்கிறது.
தீராத நோய் தீர 1 ரூபாய் பிரார்த்தனை
சரி அது என்ன பச்சைப்பட்டினி விரதம்?
மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று இங்கே பூச்சொரிதல் விழா நடைபெறும். வழக்கமாக எல்லா தலங்களிலும் பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கே பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் தொடங்குகிறது.
பூச்சொரிதலின்போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும். விரதக் காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாள்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் இங்கு நிவேதனம் நடக்கும். அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு , வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.
நாம் சமயபுரத்தில் வசிக்காமல் இருக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை கூடச் செல்ல முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவளை மனதார நினைத்து வழிபட்டாலேபோதும் அவள் ஓடிவந்து காப்பாள். இந்த 27 நாள்களில் தினமும் ஒருவேளையாவது அன்னையை நினைத்து உணவைத் துறந்து அவளை மனதார வழிபட்டால் அவள் நம்முடனே இருந்து காப்பாள்.
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன்முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள்.
கரும்புத் தூளி பிரார்த்தனை
இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்ளும் வேண்டுதல் இது. அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை- வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை ஆலயத்தை வலம் வந்து பிரார்த்தனை செலுத்து கிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக் கிறார்களாம்.