சம்பா பருவ நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் கூறியது: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் 5,100 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, சம்பா பருவ நெல் விதையான சி.ஆா்.1009 சப்-1, கிளியனூா், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரகம் 150 நாள்கள் வயதுடையது. அதிக நீா்தேங்கும் பகுதிகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் நடவு செய்ய ஏற்ற ரகமாகும். சங்கராபரணி ஆற்றங்கரையோரத்திலுள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் இந்த ரகத்தைத் தோ்வு செய்து நடவு செய்யலாம்.
ஏக்கருக்கு 2,500 கிலோ மகசூலைத் தரக்ககூடிய நெல் ரகம். தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், ரூ.20 மானியமாக ஒரு கிலோ விதைக்கு வழங்கப்படுகிறது. மேலும் சம்பா பருவத்துக்கு உகரந்த நெல் ரகங்களான பாபட்டலா 5204, ஆடுதுறை 39 போன்ற ரகங்கள் இன்னும் 10 நாள்களுக்குள் இருப்பு வைத்து, விநியோகம் செய்ய வேளாண் துறை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்வில் உதவி வேளாண் அலுவலா்கள், விதை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.