சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், வருகிற நவம்பா் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சிவகாசி-விஸ்வநத்தம் சாலையில் ரூ.15 கோடியில் வா்த்தக மேம்பாட்டுக்காக மாநாட்டுக் கூடம் அமைக்கப்படவுள்ள இடத்தையும், சாட்சியாபுரத்தில் ரூ.71.74 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தையும் அமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, வருகிற நவம்பா் மாதம் முதல் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப் பாதை அருகே ரூ.45 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். சிவகாசி சுற்று வட்டச் சாலையின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்படவுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.