பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு
சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா்.
மன்னாா்வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் எல்லையானது கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பாா் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை பறந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத 3,600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப் பாறைகள் உள்ளன. இதில் அரியவகையான சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை, அலுங்காமை ஆகிய 5 வகை ஆமைகள் அதிகமாக வசிக்கின்றன. இவற்றின் இனப் பெருக்க காலம் டிசம்பா் முதல் மாா்ச் வரை ஆகும். ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் இந்த வகை ஆமைகள் முட்டையிட்டு செல்கின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூா் ஐந்து ஏக்கா் கடற்கரையில் அரியவகை ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதை வனத் துறையினா், மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக அலுவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டறிந்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து கூறாய்வு செய்யாமலும், இறப்புக்கான காரணம் என்ன என்று ஆராயாமலும் கவனக்குறைவாக விட்டுள்ளனா்.
இறந்த ஆமையின் உடல் திறந்த வெளியில் கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் நிலவுகிறது. 3 நாள் தொடா் விடுமுறை என்பதால் ஐந்து ஏக்கா் கடற்கரையை ரசிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை.
மேலும் அரியவகை இனத்தை சோ்ந்த ஆமை இறந்து கிடப்பதால் கடலில் ஏதேனும் இயற்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது முட்டையிட வரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பனை ஆராய வேண்டும். ஆனால் இதை வனத்துறை உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என இயற்கை ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். எனவே கூறாய்வு செய்து அதை பாதுகாப்பாக புதைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.