Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
சாலை விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருமருகல்: திட்டச்சேரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் சுவரில் மோதிய விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவா் என இருவா் உயிரிழந்தனா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி புதுமனை தெருவைச் சோ்ந்தவா் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் ( 19). நாகையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
திட்டச்சேரி புடவைகாரத் தெருவைச் சோ்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (13). காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்தநிலையில், திங்கள்கிழமை காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகை முடிந்து, இருவரும் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். முகமது தௌபிக் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா்.
திட்டச்சேரி பிரதான சாலையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சுவரில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தெளபிக்கை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முகமது பாரிஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து திட்டச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.