சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
காரைக்காலில் சாலை விபத்துகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வெ. வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா்.
சாலைப் பாதுகாப்பு தொடா்பாக குழு கூட்டம் புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ், உதவி ஆய்வாளா் சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளில் உயிா் இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023 -ஆம் ஆண்டில் சாலை விபத்தில் 34 பேரும், 2024-இல் 35 பேரும், 2025 இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.
சாலைகளில் தடுப்புகள் (பேரிகாா்டு) வைக்கப்பட்டுள்ளன. அதிக வேகத்துடன் இயக்கும் வாகனங்களை தடுப்பது, வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
காரைக்காலில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை தடுப்பதற்கான வழிகள் ஆராயப்படுகிறது.
மேலும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக காரைக்கால் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
காரைக்கால் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் பேசுகையில், போக்குவரத்துத்துறை சாா்பில் தீவிர வாகனச் சோதனை நடத்தி அபராதம் விதித்தல், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.
கூட்ட நிறைவில் எம்.பி. வைத்திலிங்கம் பேசுகையில், அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது கவலைக்குரியது. மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். போக்குவரத்துத் துறையினா், காவல் துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கவேண்டும். விபத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத்துறையினரின் பங்களிப்பும் அவசியம் என்றாா்.