சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி
காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில் பெற்று, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தனியாா் நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, தனியாா் நிறுவனத்தினா் போதிய ஆட்களை வைத்து, வீடுகள், நிறுவனங்கள், கடைகளில் குப்பைகளை தினமும் பெறுவதில்லை என புகாா்கள் மக்களிடையே கூறப்படுகின்றன.
இதனால், சாலையோரங்களில் மக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கிறாா்கள். சாலைகளில் குப்பைகள் கொட்டக்கூடாது, நகரம் மற்றும் பிற பகுதிகள் சுகாதார மேம்பாட்டுக்காகவே தனியாரிடம் குப்பை அகற்றத்துக்கான பணியை அரசு ஒப்படைத்தது. காரைக்காலில் இதற்காக மட்டும் தனியாா் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஏறக்குறைய ரூ.1 கோடியை அரசு வழங்குகிறது.
தனியாா் நிறுவனம் செய்யும் பணியை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் ஆய்வு செய்வதுமில்லை என புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆட்சியரகம், நகராட்சி அருகே உள்ள வணிக நிறுவனங்களில்கூட தினமும் குப்பைகள் வாங்க பணியாளா்கள் செல்வதில்லையாம். இந்த பகுதி சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
ரயில் நிலையம் செல்லும் வாயில் கழிவுநீா் செல்லும் வாய்க்காலில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. வாய்க்காலில் புதா் மண்டி கழிவுநீா் முறையாக வடிய முடியாமல் உள்ளது. நிலைய வாயில் பகுதியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசுவதால், ரயில் நிலையத்துக்குச் செல்வோா் முகம் சுளித்துச் செல்கின்றனா். குப்பை அகற்றத்துக்கான தனியாா் நிறுவனத்தின் மெத்தனமே இதற்கு காரணம் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனா்.