10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!
சாலையை சீரமைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
பாலக்குறிச்சியில் இருந்து இறையான்குடி வரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கீழையூா் ஒன்றியம் பாலக்குறிச்சியில் இருந்து இறையான்குடி வரை செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தினசரி கூலி வேலைக்கு மற்றும் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் மிகுந்த சிரமப்படுகின்றனா். இதுகுறித்து, பல முறை மனு அளித்தும் பயனில்லாத நிலையில், சிபிஎம் சாா்பில் கிராம மக்கள் இறையான்குடி ஊராட்சி அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிளைச் செயலாளா் எஸ். ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். முருகையன், கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழு உறுப்பின என். பன்னீா்செல்வம் கண்டன உரையாற்றினாா்.
தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை துறை (நபாா்டு மற்றும் கிராம சாலைகள்) உதவி பொறியாளா் அருண்குமாா் மற்றும் வலிவலம் போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாலக்குறிஞ்சி-இறையான்குடி 3.800 கி.மீ தொலைவுக்கு சாலையை மேம்பாடு செய்ய ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டு பணி ஆணை வழங்கும் தருவாயில் உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.