மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
மீன்வளப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பெருவிழா
நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 14-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மீன்வளப் பல்கலைக்கழகமும் வேளாண்மை அறிவியல்நிலையமும் இணைந்து ‘விவசாயப் பெருவிழா, விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தலைமை வகித்து பேசியது: மீன்வளத்தில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்காக பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், இயக்குநரகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், தொழிநுட்பக் கல்லூரிகள், மீன்வளா்ப்பு காப்பகங்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவை தற்போது 13 மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மீன்கள் வளா்ப்பு மற்றும் அவற்றிற்கான மீன் குஞ்சுகள் உற்பத்தி, மீன் உணவு உற்பத்தி, மீன் நோய்கட்டுபாடு ஆகியவற்றில் தொழில்நுட்ப பயிற்சிகளும். திறன் வளா்ப்பு பயிற்சிகளும் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக ஹைதராபத்தில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பத்தாவது மண்டல இயக்குநா் ஷேக். நா. மீரா பங்கேற்று கண்காட்சியை தொடக்கிவைத்து பேசியது: இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வேளாண்மை மற்றும் உணவு உற்பத்திக்கான வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளா்ப்பு, மீன்வளா்ப்பு ஆராய்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது வேளாண்மைக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தோட்டக்கலை, கால்நடை வளா்ப்பு, மீன்வளா்ப்பு ஆகியவை முக்கிய கூறுகளாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்திற்கு உட்பட்டு கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு ஆகியவை மேற்கொள்ள சிந்தனைகள் உருவாக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கைப்பேசி செயலியை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்றாா்.
காரைக்கால் வேளாண்மை அறிவியல் நிலைய முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். ரெத்தினசபாபதி, காரைக்கால், பண்டித ஜவாகா்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி தோட்டக்கலை பேராசிரியா் வி.சுந்தரம், கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவா் சி. சுரேஷ், தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் பி. யுவராஜன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன் ஆகியோா் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனா்.
விழாவில், விவசாயிகளுக்கு அலங்கார மீன் குஞ்சுகள், கூட்டு மீன் குஞ்சுகள், பாக்கு மீன்குஞ்சுகள், கோழி குஞ்சுகள், ஆடு குட்டிகள், கண்காட்சியில் பங்கேற்ற மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலககண்ணன், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பா. பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.